Monday, August 2, 2010

தகவல் தொழில்நுட்பத்துறையில் அபார வளர்ச்சி

பலதுறை பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த கோவை மாவட்டம், தகவல் தொழில்நுட்பத்துறையில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது,'' என, ஸ்டிக்கான் 2010 மாநாட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கோவையில் நேற்று துவங்கிய ஸ்டிக்கான் 2010 மாநாட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறுதொழில் வளர்ச்சிக்காக 1970ல் சிட்கோவை முதல்வர் நிறுவினார். 2006 வரை சிட்கோ கட்டுப்பாட்டில் 78 தொழிற்பேட்டைகள் இருந்தன. அவை 2011ம் ஆண்டிற்குள் 108 ஆக உயர்த்தப்படும். சிட்கோ தொழிற்பேட்டையில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 774 தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. உள்நாட்டு உற்பத்தி 11கோடியே 433 லட்சமாகும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி 3 கோடியே 112 லட்சமாகும். இதனால் மாநில அரசுக்கு ஆயிரத்து 80 கோடி ரூபாய் வருவயாகவும், மத்திய அரசுக்கு 3 ஆயிரத்து 112 கோடி வருவாயாகும் கிடைக்கிறது. கடந்த நான்காண்டுகளில் சிறு,குறு மற்றும் நடுத்தரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவு செலவு மதிப்பீடு 282 கோடியே 79 லட்ச ரூபாய். நடப்பாண்டில் திட்டமதிப்பீடு 98 கோடியே 26 லட்ச ரூபாயாகும்.கடந்த நான்காண்டுகளில் முதலீட்டு மான்யம், விற்பனை வரி மான்யம், ஜெனரேட்டர் மான்யம், பின்முனை வட்டி மான்யம், குறைந்த அழுத்த மின்மான்யம் ஆகிய மான்யங்கள் சேர்த்து மொத்தம் 83.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மான்ய இலக்கு வழங்க 56 கோடியே 14 லட்சத்தை அரசு நிர்ணயித்துள்ளது.
சிறு தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிகச்சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 6.31 லட்சம் பதிவு பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. கோவையில் 35 ஆயிரத்து 933 பதிவு செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் 20 சதவீத அன்னிய செலாவணி, கோவை மாவட்ட மில்களிலிருந்து கிடைக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் கோவை இரண்டடுக்கு மாவட்டமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பம்புகளில் 50 சதவீதம் கோவை மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். ஆண்டு ஏற்றுமதி மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாயாகும்.மாநாட்டையொட்டி கொடுக்கப்பட்டுள்ள 11 கோரிக்கைகள் ஆய்வுக்குட்படுத்தி நிறைவேற்றப்படும். தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் உலகமெங்கும் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்படவேண்டும். அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு இம்மாநாடு வழிவகுக்கும் என்றார். இம்மாநாட்டில் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.-Dinamalar

No comments:

Post a Comment